இந்தியா-ஆஸ்திரேலியா ராணுவ ஒப்பந்தம்: காணொலி காட்சி மூலம் மோடி பங்கேற்ற உச்சி மாநாட்டில் கையெழுத்தானது

Spread the love

காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்ற உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

புதுடெல்லி,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. வெளிநாட்டு தலைவர் ஒருவருடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உச்சி மாநாடு நடத்தி ஆலோசிப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

இந்த மாநாட்டின் போது சுகாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும், அதற்கு இதுதான் உரிய நேரம் மற்றும் சந்தர்ப்பம் என்றும் கூறினார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், சர்வதேச நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படமுடியும் என்றும் கூறிய அவர்கள், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்கள்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் இந்தியாவின் நிலைப்பபாட்டுக்கு ஆதரவு அளித்து வரும் ஆஸ்திரேலியா, தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக்கொண்டு உள்ளது.

நேற்றைய மாநாட்டின் போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. அதன்படி ஒரு நாடு மற்றொரு நாட்டின் ராணுவ தளங்களை பொருட்களை வைத்துக் கொள்ளவும், பழுதுபார்த்தல் பார்த்தல் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இதுபோன்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே கையெழுத்திட்டு உள்ளது.

இது தவிர இணையதள குற்றங்கள் தொடர்பான விசாரணையில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்பது, சுரங்கம், கனிமவளம், நீர்வள மேலாண்மை உள்ளிட்டவை தொடர்பாக ஆஸ்திரேலியாவுடன் மேலும் 6 ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

பின்னர் மாநாட்டின் முடிவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மாங்காய் சட்னியை தொட்டு சமோசாவை சுவைத்தார். அடுத்த முறை இருவரும் நேரில் சந்தித்து பேசும் போது மோடிக்கு குஜராத் கிச்சடி செய்து வழங்கப்போவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுத்து நிறுத்தவும் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page