அமெரிக்காவில் நீடித்து வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், மினியாபொலிஸ் நகரில் போலீசார் பிடியில் கடந்த 25-ந் தேதி கொலை செய்யப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலையில் நீதி கோரி கருப்பர் இன மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்குகளையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து 8-வது நாளாக போராடி வருகின்றனர்.
வாஷிங்டனில் பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. அதே சமயம் நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது உயர் போலீஸ் அதிகாரி ஒருவரது கழுத்தில் மர்நபர் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார், பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அமெரிக்காவில் நீடித்து வரும் போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் வாழ்வும், கனவும் கூட முக்கியம் என்பதை உணர வேண்டும் என முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.