உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 66 லட்சத்தை நெருங்கி உள்ளது.

வாஷிங்டன்,
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து தன் பரவலால் அலற வைத்து வருகிறது.
64 லட்சம் பேருக்கும் மேலாக இந்த வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது. எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும் பலனற்றுப்போய் 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களது இழப்பால் குடும்பத்தினர் மீளாத சோகத்தில் இருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த கொரோனாவை கொல்வதற்கு இன்னும் ஒரு மருந்து, சந்தைக்கு வருவதில்லை. இந்தியாவில் தொடங்கி இஸ்ரேல் வரை எத்தனையோ நாடுகள் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் கண்டறிந்து அவற்றை சோதனை செய்யும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றன. சோதனை செய்து வெற்றி கண்டு தயாரிக்கத்தொடங்கினாலும் எல்லா மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமானால் ஒன்றிரண்டு ஆண்டுகள் வரையில் ஆகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 700-கோடிக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி மருந்தினை தயாரிப்பது என்பது எளிய வேலை இல்லை. அது இந்தக்கணத்தில் உலகிலேயே பிரமாண்டமான பணியாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரோனாவால் நாள்தோறும் ஆயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 88 ஆயிரமாகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65 லட்சத்து 96 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 31 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
உலகில் கொரோனா மையமாக திகழும் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 1 லட்சத்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு தினமும் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.