10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து; முதல் அமைச்சர் அறிவிப்பு

Spread the love

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு, ஜூன் 15ந்தேதி முதல் 25ந்தேதி வரை நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் கூறினார். தொடர்ந்து ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் உள்ளிட்ட தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்தன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சூழலில் தேர்வை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 10ம் வகுப்பு பொது தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நேற்று அதிருப்தி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற 11ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தேர்வு நடத்துவதுபற்றி, பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி முதல் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மேல் வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பற்றி வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page