பண பரிமாற்ற திட்டம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவி: இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி

Spread the love

பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி

தெற்காசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 1.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2,463க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவரும் பாகிஸ்தான் அரசு பொருளாதார பிரச்சினைகள் காரணமாக கடுமையான ஊரடங்கை நடைமுறைப் படுத்த தயக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தானில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்கனவே பாகிஸ்தானில் இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ தாங்கள் கையாண்ட பணப் பரிமாற்றத் திட்டத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்தித்திருந்தார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் இம்ரான்கான்

இந்தியக் குடும்பங்களில் 34 சதவீதம் பேர் கூடுதல் உதவி இல்லாமல் ஒரு வாரத்திற்கு மேல் வாழ முடியாது. நாங்கள் செயல்படுத்திய வெற்றிகரமான பணப் பரிமாற்றத் திட்டத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இந்தப் பணப் பரிமாற்றத்தின் வெளிப்படைத் தன்மை சர்வதேச சமூகத்தால் பாராட்டப்பட்டது. கொரோனா காலத்தில் பாகிஸ்தான் கடந்த 9 வாரங்களில், ஒரு கோடி ஏழை மக்களுக்கு 12 கோடி வரை வெற்றிகரமாக பணப் பரிமாற்றம் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் இம்ரானின் பதிவுக்கு ஏற்கனவெ நெட்டிசன்கள் பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பை தடுத்து முதலில் மக்களை காப்பாற்றுங்கள் என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த பதிவுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 சதவீத அளவுக்கு பாகிஸ்தானுக்கு கடன் சுமை உள்ளது என்பதை அந்நாடு நினைவு கொள்வது நல்லது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்புக்கான இந்தியாவின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு பெரியது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page