சென்னையில் இன்று கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு

Spread the love

சென்னையில் இன்று கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில் 1,479 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறை அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 40 ஆயிரத்து 698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 18 பேர் பலியானார்கள். நேற்று உயிரிழந்த 18 பேரில் 15 பேர் சென்னையையும், 2 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தையும், ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இதனால் மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 367 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று சென்னையில் கொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 4 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி, ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவர் உட்பட 9 பேர் இன்று கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page