தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்

Spread the love

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் 502 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிடறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 14 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,938இல் இருந்து 30,444 ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,243 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் தமிழகத்தில் 0.93ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 1,362 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,409 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page