200 வார்டுகளுக்கு தனி குழு நியமனம் கொரோனா பரவலை தடுக்க மைக்ரோ திட்டம் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Spread the love

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.


சென்னை,

சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 15 மண்டலங்களிலும் உள்ள 200 வார்டுகளிலும் 200 உதவி பொறியாளர்களை குழு தலைவர்களாக நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்த உள்ளது. இந்த குழுவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் இணைந்து பணியாற்றுவார்கள்.

தொடர்புகளை கண்டறிதல்

இந்த குழுவின் பணியானது கொரோனா தொற்று பாதித்தவரை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்தல் மற்றும் அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் 11 ஆயிரத்து 500 பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்வார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க செய்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை தன்னார்வலர்களுடன் இணைந்து இவர்கள் செயல்பட வேண்டும்.

‘சின்டெக்ஸ்’ தொட்டிகள்

மேலும் குழாய்கள் மூலம் குடிநீர் பெற வசதி இல்லாத குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள் லாரியில் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக பெருமளவில் கூடுகின்றனர். இதனை தவிர்க்க பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்துடன் இணைந்து ’சின்டெக்ஸ்’ தண்ணீர் தொட்டிகள் அமைத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் குமாரவேல் பாண்டியன், மேகநாத ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page