ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி

Spread the love

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலந்தூர்,

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பழனி (வயது 61). இவர் சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட முகலிவாக்கம் மதனந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த 12ந் தேதி இரவு எம்.எல்.ஏ. பழனிக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மனைவி, மகளுக்கும் தொற்று

இதற்கிடையே எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா வைரஸ் ஆரம்ப நிலையில் உள்ளதால் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனை டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது மனைவி விஜயா (56), மகள் திவ்யா (29) ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page