மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Spread the love

ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை-எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் தமிழக அரசு செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகள்

கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், ஊரடங்கை 30-ந் தேதிவரை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்க நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

மாற்றுத்திறனுடையோர் சங்கத்தின் கூட்டு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பேரிடர் ஊரடங்கு வாழ்வாதார நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 வழங்குவதாக முதல்-அமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்று நன்றி தெரிவிக்கிறோம். கடந்த 3 மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி இது.

வாழ்வாதாரம், உணவு, அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்காக கடன் வாங்கி காலம் கழிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரினோம். எனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொகை போதாது.

தெலுங்கானாவில் ரூ.3,016, ஆந்திராவில் ரூ.2,500, கேரளாவில் ரூ.1,300, புதுச்சேரியில் ரூ.1,500 முதல் ரூ.3,300 என மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சில பிரிவினரைத் தவிர மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 சுமார் மூன்றில் ஒரு பங்கு பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே கடந்த 3 மாத இழப்பீடு மற்றும் கூடுதல் செலவீனங்களை கருத்தில் கொண்டு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page