இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவின் மகன் ராணுவ வீரர் கே.பழனி உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.
ரூ.20 லட்சம்
இரவு, பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்திய திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய திருநாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கலெக்டர் மரியாதை
அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.