‘அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்’ – சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்தல்

Spread the love

எல்லை நிர்வாகத்தில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன ராணுவம் கடந்த மாதம் ஊடுருவியதால் ஏற்பட்ட இருதரப்பு மோதல், தற்போது கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மிகப்பெரும் வன்முறைக்கு காரணமாகி விட்டது. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதனால் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இருநாட்டு ராணுவமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளன. இதைப்போல தூதரக ரீதியாகவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் எல்லை நிர்வாகத்தில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் எல்லைக்குள் வைத்துக்கொள்ளுமாறு சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா ஆன்லைன்மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தங்கள் தூதரகங்கள், வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் ராணுவ மட்டத்தில் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன. எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் செயல்பாட்டு வழிமுறை மட்டத்திலான கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனையும் நடந்து வருகிறது.

எல்லை நிர்வாகத்தில் பொறுப்பான அணுகுமுறையை பொறுத்தவரை, நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் எங்கள் எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்வது என்பதில் இந்தியா மிக தெளிவாக இருக்கிறது. இதைப்போல சீனாவும் அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் எல்லைக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எல்லையில் அமைதியையும், நிலைத்தன்மையையும் பேணுவதன் அவசியம் மற்றும் வேறுபாடுகள் அனைத்தையும் பேச்சுவார்த்தைகள் மூலம் களைவதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதேநேரம் பிரதமர் நேற்று (நேற்று முன்தினம்) கூறியது போல இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்வதில் நாங்கள் மிகுந்த உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

இதற்கிடையே கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் சிலர் மாயமாகி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதை அனுராக் ஸ்ரீவத்சவா மறுத்தார். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என அவர் உறுதிபட தெரிவித்தார்.

இதைப்போல இந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் மாயமாகவில்லை என ராணுவமும் நேற்று உறுதிபடுத்தியது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page