கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உள்நாட்டு சுற்றுலாவை சவுதி அரேபியா மீண்டும் தொடங்க உள்ளது.

ரியாத்,
அரபு நாடுகளில் கொரோனோ பாதிப்பில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனோ வைரஸ் பாதித்த வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 234 ஆக உள்ளது. இதுவரை ஆயிரத்து 91 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சவுதி அரேபியாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், அந்த நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தி வருகிறது.
அந்தவகையில் சிறிய கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்தும் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மசூதிகள் திறக்கப்பட்டு தொழுகை நடத்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் உள்நாட்டு விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது.
இந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் உள்நாட்டு சுற்றுலாவை மீண்டும் தொடங்க சவுதி அரேபிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலா துறை மந்திரி அகமது பின் அகீல் காதிப் கூறுகையில் “ கோடை காலத்தில் உள்நாட்டு சுற்றுலாவுக்காக நாங்கள் பல திட்டங்களை உருவாக்கி உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் அவற்றை நாங்கள் செயல்படுத்த தொடங்குவோம். நாங்கள் சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் உடன்பட்டு சுற்றுலா திட்டங்களை உருவாக்கியுள்ளோம். அதன்படி மெக்காவை தவிர அனைத்து பகுதிகளும் சுற்றுலா மீண்டும் தொடங்கும்“ எனக் கூறினார்.