ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆள் இல்லா விமானம் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

புதுடெல்லி
ஜம்மு- காஷ்மீர் எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதுடன், பயங்கரவாதிகளையும் ஊடுருவ செய்து வருகின்றனர். இதை முறியடிக்க எல்லை நெடுகிலும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கதுவா மாவட்டம் பன்சார் பகுதிக்குட்பட்ட ஹிரானாநகர் செக்டாரில் இன்று காலை எல்லை பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆள் இல்லா விமானத்தை கண்டுபிடித்து சுட்டுவீழ்த்தினர். அதில் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி சர்வதேச எல்லையைத் தாண்டி ஆயுதங்களை சப்ளை செய்ய பாகிஸ்தான் ஏஜென்சிகள் மேற்கொண்ட ஒரு முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முறியடித்து உள்ளது. \
பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு எம் 4 துப்பாக்கி, இரண்டு தோட்டா மேக்சின்கள், 60 சுற்று வெடிமருந்துகள் மற்றும் ஏழு கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் இது ‘அலி பாய்’ என்பவருக்கு இது டெலிவரி செய்யப்படுவதாக இருந்ததாக தெரிவந்து உள்ளது என கூறினார்.
பாகிஸ்தானின் எல்லையிலுள்ள குப்வாரா, ராஜோரி மற்றும் ஜம்மு துறைகளில் இதேபோன்று ஆயுதங்களை கடத்த முயன்ற முயற்சிகள் ஏற்கனவே தோல்வியடைந்துள்ளன.