எச் -1 பி விசா தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு

Spread the love

எச் -1 பி விசா முறையை சீர்திருத்தம் மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.

அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதுடன் 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது.

ஏற்கனவே பலர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் இருக்கின்றனர்.

எச்1பி, எச்4 விசாவை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரைநீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

எச் -1 பி விசா முறையை “சீர்திருத்த” மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எச் -1 பி விசா முறை தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு நகரும் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது. டிரம்ப் நிர்வாகம் மிக உயர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்ற முறையை சீர்திருத்தும் என்று அது கூறியுள்ளது.

இந்த சீர்திருத்தங்களால் எச் -1 பி திட்டம் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும், மேலும் அதிக திறமையான விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும், நம் நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக திறமை வாய்ந்தவர்களாகவும், அமெரிக்காவின் தொழிலாளர் சந்தையை குறைக்காது என்பதையும் உறுதிப்படுத்த உதவும் என்று வெள்ளை மாளிகை மேலும் கூறியது.

இதன் மூலம் அமெரிக்காவில் 5 லட்சத்துககும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் வெளியில் இருந்து சேவைகளைப் பெறுவதற்கான அவுட்சோர்சிங் பணிகள் முழுவதும் நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்கு தான் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா புதிய கெடுபிடிகளை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page