தமிழகத்தில் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா – 37 பேர் உயிரிழப்பு

Spread the love

தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 2,710 பேர் பாதிக்கப்பட்டனர். 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே போன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 2,710 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2 ஆயிரத்து 652 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 53 பேர் என நேற்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 1,742 ஆண்களும், 968 பேர் பெண்களும் ஆவார்கள். அதிலும் 12 வயதுக்கு உட்பட்ட 126 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 253 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 331 முதியவர்கள் அடங்குவர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 38 ஆயிரத்து 340 ஆண்களும், 23 ஆயிரத்து 727 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 20 பேரும் உள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு பலனாக நேற்று 1,358 பேர் நலம் அடைந்தனர். இதுவரை 34 ஆயிரத்து 112 பேர் குணம் அடைந்து உள்ளனர். 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் 30 பேர், தனியார் மருத்துவமனையில் 7 பேர் என 37 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதில் சென்னையை சேர்ந்த 23 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரை சேர்ந்த தலா 4 பேரும், காஞ்சீபுரம், விழுப்புரத்தை சேர்ந்த தலா இருவரும், கள்ளக்குறிச்சி தூத்துக்குடியை சேர்ந்த தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்து உள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும்…

தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக நோய் தொற்று இருப்போர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர். அதன்படி சென்னையில் 1,487 பேரும், மதுரையில் 157 பேரும், திருவண்ணாமலையில் 139 பேரும், செங்கல்பட்டில் 126 பேரும், திருவள்ளூரில் 120 பேரும், கடலூரில் 63 பேரும், தூத்துக்குடியில் 62 பேரும், காஞ்சீபுரத்தில் 56 பேரும், ராணிப்பேட்டையில் 52 பேரும், திருச்சியில் 51 பேரும், விழுப்புரத்தில் 41 பேரும், தஞ்சாவூர், தேனியில் 36 பேரும், சிவகங்கையில் 33 பேரும், திருப்பத்தூரில் 26 பேரும், சேலத்தில் 24 பேரும், தென்காசியில் 20 பேரும், ராமநாதபுரத்தில் 18 பேரும், நாகப்பட்டினத்தில் 17 பேரும், புதுக்கோட்டையில் 16 பேரும், கள்ளக்குறிச்சியில் 14 பேரும், வேலூர், திருவாரூரில் தலா 13 பேரும், அரியலூர், கோவையில் தலா 12 பேரும், கன்னியாகுமரியில் 10 பேரும், கிருஷ்ணகிரியில் 9 பேரும், திண்டுக்கலில் 7 பேரும், நெல்லை, விருதுநகரில் தலா 5 பேரும், கரூரில் 4 பேரும், தர்மபுரி, ஈரோடு, நீலகரி, திருப்பூரில் தலா இருவரும், பெரம்பலூர், நாமக்கலில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

9 லட்சம் பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் நேற்று 25 ஆயிரத்து 234 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்து 19 ஆயிரத்து 204 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page