தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிகிறார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.