அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்

Spread the love

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்

 


லக்னோ,

அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட்டு அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து ராமர் கோவில் கட்டுமான பணிகளை கண்காணிக்க “ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட்” என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கியது. கொரோனா வருடங்களுக்கு மத்தியிலும் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு சென்று ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாசை நேரில் சந்தித்து கட்டுமான பணிகள் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் ராம ஜென்ம பூமியில் மரக்கன்று ஒன்றை நட்டார்.

முன்னதாக நேற்று முன்தினம் மதியம் கோண்டா மாவட்டத்தில் இருந்து அயோத்திக்கு சென்ற யோகி ஆதித்யநாத் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் லாலு சிங் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page