இந்தியாவில் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி? மனிதர்களிடையே பரிசோதிக்க மேலும் ஒரு மருந்துக்கு அனுமதி

Spread the love

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


புதுடெல்லி,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் இல்லை. மலேரியா எதிர்ப்பு மருந்து உள்ளிட்ட சில மருந்துகளை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தந்து பல நாடுகள் நிலைமையை சமாளித்து வருகின்றன.

கொரோனா நோய்த்தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் களத்தில் குதித்துள்ளன. இந்தியாவிலும் இதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில், பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த மருந்து விலங்குகளிடையே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதால், மனிதர்களிடையே பரிசோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தது.

இந்த நிலையில், ஜைடஸ் கடிலா என்ற நிறுவனமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் கோவிட் 19 புதிய வகையான வைரஸ் என்பதால், இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது கடும் சவாலான பணியாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை உலக அளவில் 17 தடுப்பு மருந்துகள் மனிதர்களிடையே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page