சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று திறப்பு

Spread the love

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.


புதுடெல்லி,

இந்தியாவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வழிபாட்டுத்தலங்கள், நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்பட மொத்தம் 3691 சுற்றுலாத்தலங்கள் உள்ளன. கொரோனா நோய் பரவலை அடுத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது.

இதனைப் பயன்படுத்தி 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 8 ந் தேதி வழிபாட்டுத்தலங்களுடன் இணைந்த சுற்றுலாத்தலங்கள் என்ற வகையில் 820 சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போதைய 6-ம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீதமுள்ள சுற்றுலாத் தலங்களில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வராத சுற்றுலாத்தலங்கள் 6-ந் தேதி (இன்று) திறக்கப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் கூறியிருந்தார்.

அதன்படி இன்று தாஜ்மஹால், செங்கோட்டை உள்பட நாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் திறக்கப்படுகிறது.

இதனையொட்டி இந்த சுற்றுலாத்தலங்களில் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களின் நுழைவுவாயிலில் வெப்ப பரிசோதனை மற்றும் கை சுகாதாரம் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படு வார்கள். சுற்றுலா பயணிகள் எந்நேரமும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக விலகலை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

சுற்றுலாத்தலங்களில் உள்ள உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. குழு புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் மற்றும் வாகன நிறுத்த கட்டணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேர் பார்வையிடும் தாஜ்மஹாலில் தற்போது 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் இந்த 5 ஆயிரம் பேரும் 2 பிரிவாகவே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் தாஜ்மஹாலின் பளிங்கு சுவர்களை தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்பட மாட்டாது என்றும், வருகிற 31-ந்தேதி வரை புராதன சின்னங்களை திறப்பதற்கான தடை நீடிக்கும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page