கொரோனாவை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறை கேரளாவில் அதிரடி அவசர சட்டம்

Spread the love

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்து அதிரடியாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரம்,

கொரோனா பரவலை நேர்த்தியாக கையாண்டு கட்டுப்படுத்திய கேரள மாநிலத்திலும் தற்போது பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. 3048 பேர் குணம் அடைந்துள்ளனர். 2131 பேர் தொடர்ந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் கேரள அரசு தொற்று நோய் சட்டத்தில் புதிய திருத்தங்கள் செய்து அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக திருவனந்தபுரத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த திருத்தங்களின்படி, திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க இயலும்.

இந்த அவசர சட்டம், ஒரு வருடத்துக்கு அல்லது புதிய உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும்.

தொற்று நோய் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் இவை:-

* பொது இடங்களில், வேலை பார்க்கும் இடங்களில், வாகனங்களில் செல்கையில், மக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

* பொது இடங்களில், நிகழ்வுகளில் கண்டிப்பாக எப்போதும் 6 அடி தொலைவுக்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* கடைகளில், வர்த்தக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 25 பேருக்கு மேல் கூடக்கூடாது. கடைக்குள் வரும்போது வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே வர ஏதுவாக கண்டிப்பாக கடை உரிமையாளர்கள் சானிடைசர் திரவம் வைத்திருக்க வேண்டும்.

* திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பங்கேற்போருக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் திரவம் தர வேண்டும். துக்க நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

* வேலை நிறுத்தம், தர்ணா, பேரணி, போராட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்று 10 பேர் மட்டுமே இதில் கலந்து கொள்ளலாம்.

* பொது இடங்களில், சாலைகளில், நடைபாதைகளில் எச்சில் துப்பக்கூடாது.

* வெளியிடங்களில் இருந்து கேரளா வருவோர் வருவாய் துறையின் ‘ஜக்ரதா’ இணையதளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்த திருத்தங்களில் எதை மீறினாலும், அந்த நபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

நமது நாட்டிலேயே முக கவசம் அணிவதை, தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை கடுமையாக ஆக்கி, தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவித்துள்ள முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page