பழைய பாடத்திட்டமே தொடரும் பிளஸ்-1, பிளஸ்-2 புதிய பாடத்திட்ட முறை ரத்து அரசு அறிவிப்பு

Spread the love

நடப்பாண்டில் அறிமுகப்படுத்த இருந்த பிளஸ்-1, பிளஸ்-2 புதிய பாடத்தொகுப்பு முறையை அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.


சென்னை,

மேல்நிலைக்கல்வியில் (பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு) வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி இதில் எந்த பாடத்திட்ட முறையை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நடைமுறை நடப்பாண்டில் (2020-21-ம் கல்வியாண்டு) இருந்து அமலுக்கு வரும் என்று சமீபத்தில் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் புதிய பாடத்தொகுப்பு முறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள், கல்வியாளர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதனை ரத்து செய்வதாக அரசு அறிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்கள் 3 முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்போது, உயிர்கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் சுருங்கநேரிடும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்பினையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்து இருந்தார்.

அதனை அரசு பரிசீலனைசெய்து, மாணவர்களின் நலன் கருதி, புதிய பாடத்திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையினை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மேலும், 2020-21-ம் கல்வியாண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page