சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக “யார் விசாரணை நடத்தினாலும் எனது தந்தை-தம்பி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று ஜெயராஜின் மகள் பெர்சி கூறினார்.

சாத்தான்குளம்,
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மகள் பெர்சி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
எனது தந்தை ஜெயராஜ், சகோதரர் பென்னிக்ஸ் ஆகியோரின் இறப்பு குறித்து ஐகோர்ட்டு நேரடி மேற்பார்வையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்பதாக கூறப்படுகிறது. எங்களை பொறுத்தவரையில் யார் விசாரித்தாலும் எனது தந்தை, தம்பி மரணத்துக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். எங்களுக்கு நீதிமன்றம் மீதும், சி.பி.ஐ. மீதும் நம்பிக்கை இருக்கிறது.
எங்களுக்கு நீதி கிடைக்க அரசும், நீதித்துறையும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தாமதம் இல்லாமல் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். எதற்காக விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்றால், இந்த மாதிரியான ஒரு கொடூர செயல் இனி தமிழகத்தில் எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் விரைந்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.