எல்லையில் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக, பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆப்கானிஸ்தான் கடிதம் எழுதி உள்ளது.

நியூயார்க்,
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ படைகள் தங்கள் மண்ணில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தொடர்பாக ஆப்கானிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது.
பாகிஸ்தான் அத்து மீறலை முடிவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை ஆப்கானிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் நிரந்தர தூதர் அடிலா ராஸ் இது குறித்து கூறுகையில் “கடந்த 15-ந் தேதி குனார் மாகாணத்தின் சரகானோ மற்றும் ஆசாத் அபாத் மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 4 பேரும் அப்பாவிப் பொதுமக்கள் 6 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் இறையாண்மைக்கு எதிரான மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” எனக் கூறினார்.