தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா? – எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை

Spread the love

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29-ந்தேதி (புதன்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை,6 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், 6-வது கட்ட ஊரடங்கு வரும் 31-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அவ்வப்போது தளர்வுகள்

அறிவிக்கப்பட்டதன் விளைவாக, கடைகள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கார்- ஆட்டோக்களும் ஒட அனுமதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொண்டும், கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. ஆரம்பத்தில், சென்னையில் மட்டும் அதிகமாக இருந்த கொரோனா, பின்னர் மாவட்டங்களிலும் பல்கி பெருகத் தொடங்கியது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ‘இ-பாஸ்’ கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வரும் 31-ந்தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா?, அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வரும் 29-ந்தேதி காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா? என்பது குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. அநேகமாக, இந்தக் கூட்டத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page