சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக போலீசில் 6 பேருக்கு சிறப்பு விருது: மத்திய அரசு வழங்குகிறது

Spread the love

சிறந்த புலனாய்வு பணிக்காக தமிழக போலீசில் 6 பேருக்கு மத்திய அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

குற்றங்கள் பற்றி சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பு விருதுகளை வழங்கி கடந்த 4 ஆண்டுகளாக கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த விருதுக்காக இந்தியா முழுவதும் இருந்து 121 காவல்துறை அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் தமிழக காவல்துறையை சேர்ந்த 6 பேர் இடம்பெற்று உள்ளனர்.

அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

ஜான்சிராணி – இவர், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி போலீஸ் நிலையத்தில் மகளிர் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

கவிதா – இவர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆவார்.

பொன்னம்மாள் – இவர், நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இன்ஸ்பெக்டராக பணி செய்கிறார்.

சந்திரகலா – இவர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளார்.

வினோத்குமார் – இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

கலா – இவர், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

இவர்கள் மேற்கண்ட போலீஸ் நிலையங்களில் வேலை செய்தபோது இந்த விருதுக்கான பணியை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவர்கள் ஆவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page