சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: மதுப்பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைப்பு

Spread the love

சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி, கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களை ஒழுங்குபடுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

 

இந்த நிலையில் சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருக்கும் மதுக்கடைகள் 18-ந் தேதி (இன்று) முதல் திறக்கப்படும் என்றும், மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரில் இதுவரை திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளில் தற்போது சீரமைப்பு பணி மற்றும் தூய்மை பணிகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும், பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சென்னையில் மதுக்கடைகள் திறக்கும் நடவடிக்கையால் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனை இனி இருக்காது என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.அன்புச்செல்வன் கூறுகையில், “சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்த போது மாவட்ட எல்லைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்யும் போக்கு இருந்து வந்தது. தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நடவடிக்கையால், இனி கள்ளச்சந்தையில் மது விற்பனை நிச்சயம் இருக்காது. இடைத்தரகர்களின் தலையீடு ஒழிக்கப்படும்” என்றார்.

டாஸ்மாக் கடைகள் திறக் கப்பட்டாலும் சாலையில் நின்று மது அருந்துவது உள்ளிட்ட முகம் சுழிக்கும் செயல்களில் மதுப்பிரியர்கள் ஈடுபடாத வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page