‘இந்தியாவுடனான உறவில் ஜனாதிபதி டிரம்ப் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்’ – வெள்ளை மாளிகை தகவல்

Spread the love

இந்தியாவுடனான உறவில் ஜனாதிபதி டிரம்ப் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


வாஷிங்டன்,

அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதிகளை காட்டிலும் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், இந்தியா-அமெரிக்கா உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இந்திய அமெரிக்க உறவுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளிலும் மேம்படுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

இதற்கு முந்தைய நிர்வாகங்களில் இல்லாத அளவுக்கு, டிரம்ப் நிர்வாகம் இந்தியாவுடனான உறவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரு நாடுகளும் பரஸ்பர நலன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. பிப்ரவரி 24 முதல் 26-ந்தேதிகளில் டிரம்ப் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவரும், பிரதமர் மோடியும் இருநாட்டு உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்த வெளிநாட்டு தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். ஹூஸ்டனில் 2019 செப்டம்பரில் நடைபெற்ற ஹவுடி மோடி விழாவில் 55,000-க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு பிப்ரவரி 2020-ல் குஜராத்தில் நடந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வில் 1,10,000 மக்கள் கலந்து கொண்டனர். அப்போது இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் இரு நாட்டு மக்களின் உறவை வலுப்படுத்தியதோடு, தலைவர்களுக்கு இடையிலான அன்பான தனிப்பட்ட உறவை எடுத்துக்காட்டும் வகையிலும் அமைந்திருந்தது. ஜனாதிபதி டிரம்ப், இந்தியா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியுள்ளார். ஒப்பந்தமில்லாத கூட்டாளி அந்தஸ்தை இந்தியாவுக்கு முதன்முதலாக அவர்தான் அளித்தார். அமெரிக்கா, இந்தியாவுக்கு 2-வது பெரிய ஆயுத வினியோகஸ்தராக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page