சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். மக்கள் தவறு செய்துவிடக்கூடாது என துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறினார்.

வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி சார்பில் தான் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றைப் படைத்தார்.
தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு ஜனநாயக கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், தனது தாயை குறித்து உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துக் கொண்டார். ஒரு வலிமையான கறுப்பின பெண்ணாக இன்று தான் இருப்பதற்கு முக்கிய காரணம் தனது தாய் ஷாமலா கோபாலன் என குறிப்பிட்டார். என்னை பெற்றெடுத்த போது இந்த நாளை நினைத்திருக்க மாட்டார். இந்திய பாரம்பரியத்தை சேர்ந்தவர் தாம் என்பதில் பெருமை கொள்வதாகவும், தாய் தம்முடன் இல்லாவிட்டாலும் மேலே இருந்து அனைத்தையும் பார்த்து கொண்டிருப்பார் என நெகிழ்ச்சியுடன் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து துணை ஜனாதிபதி வேட்பாளராக சம்மதிக்கின்றேன். கறுப்பின மக்களுக்கு சம உரிமை இல்லை. இனவெறி என்னும் வைரஸுக்கு மருந்து கிடையாது.சிறப்பாக செயல்படும் ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். மக்கள் தவறு செய்துவிடக்கூடாது.