ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை கேட்டு வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

Spread the love

‘ஆன்லைன்’ ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.வினோத் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

‘ஆன்லைன்’ விளையாட்டுகளை பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. கடந்த 2000-ம் ஆண்டு பொழுதுபோக்கிற்காக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்போது, பணத்துக்காக விளையாடும் சூதாட்டமாக பல நிறுவனங்கள் மாற்றி விட்டன. இந்த சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுகளிடம் சட்டம் எதுவும் இல்லை.

 

ஒரு விளையாட்டு என்றால் மனதை அல்லது உடலை வலிமைப்படுத்தும் விதமாக இருக்கவேண்டும். ஆனால், இந்த விளையாட்டில் அப்படி இல்லை. பல இளைஞர்கள் இந்த சூதாட்ட விளையாட்டில் பணத்தை மட்டும் இழக்கவில்லை. மனரீதியான பாதிப்பினால், தற்கொலை செய்து தங்களது விலைமதிக்க முடியாத உயிர்களையும் இழக்கின்றனர். இளம் வயதினரின் இந்த நிலையை உணர்ந்த பல மாநில அரசுகள், இந்த விளையாட்டை தடை செய்து வருகின்றன. எனவே இந்த ‘ஆன்லைன்’ ரம்மி சூதாட்டத்துக்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும். இந்த சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஏ.ஜான்பிரிட்டோ ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page