வங்க கடலில் இந்திய-ரஷிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சி

Spread the love

வங்க கடலில் இந்திய-ரஷிய கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவும், ரஷியாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. தொழில், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்திய கடற்படையும், ரஷிய கடற்படையும் இணைந்து ஆண்டு தோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு முன் கடைசியாக 2018-ம் ஆண்டு விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சி நடத்தின.

 

இந்திய-ரஷிய கடற்படைகளின் 11-வது கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி சோய்கு அழைப்பின் பேரில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ரஷியா சென்றுள்ள நிலையில் இந்த பயிற்சி தொடங்கியது. கூட்டுப்பயிற்சி தொடங்கிய தகவலை இந்திய கடற்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி கமாண்டர் விவேக் மத்வால் தெரிவித்தார்.

‘இந்திரா நேவி-2020’ என்ற பெயரில் நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் ஏவுகணை அழிப்பு கப்பல் ரன்விஜய், சக்தி உள்ளிட்ட போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் கலந்துகொள்கின்றன. ரஷிய தரப்பில் அட்மிரல் வினோக்ராதோவ், அட்மிரல் டிரிபட்ஸ், போரிஸ் புடோமா போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடற்படை வீரர்கள் ஒருவருடன் ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் உரிய பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூட்டுப்பயிற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page