இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை

Spread the love

இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதுடெல்லி,

லடாக் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 8-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எல்லையில் இரு தரப்பும் படைகளை திரும்ப பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

லடாக்கில் கடந்த மே மாதம் சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதால் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஜூன் மாதம் நிகழ்ந்த கைகலப்பில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்தும் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீற முயன்றதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த பதற்றத்தை தணித்து மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைகளை, குறிப்பாக படைகளை திரும்ப பெறுவது குறித்த பேச்சுவார்த்தைகளை தொடர்வது என இருதரப்பும் முடிவு செய்துள்ளன.

அந்த வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான 8-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே உள்ள இந்திய பகுதியான சுசுல் என்ற இடத்தில் நடந்தது.

இதில் இந்திய குழுவுக்கு லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமை தாங்கினார். இவர் லேயை மையமாக கொண்டு இயங்கும் 14-வது படைப்பிரிவின் கமாண்டராக சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் கடந்த 2 சுற்று பேச்சுவார்த்தைகளில் இவரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 8-வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்குவது குறித்தும், இதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா முதலில் படைகளை விலக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த இந்தியா, இருதரப்பும் ஒரே நேரத்தில் படைகளை விலக்க வேண்டும் என கூறியிருந்தது.

எனவே நேற்றைய பேச்சுவார்த்தையில் படை விலக்கல் நடவடிக்கை குறித்து மீண்டும் பேசப்பட்டதாக தெரிகிறது. இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page