தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி – கடந்த ஆண்டை விட ரூ.17½ கோடி குறைந்தது

Spread the love

தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது.


சென்னை,

பண்டிகை தினம் என்றாலே, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் ஆங்கில புத்தாண்டு என்றால், திருவிழா கூட்டம் போன்று ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் களைகட்டும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த ‘டாஸ்மாக்’ பார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இது தங்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு போன்று மதுபிரியர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதாலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாகவும் இந்த புத்தாண்டில் மது விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று ஊழியர்கள் கூறினர்.

புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த புத்தாண்டின் (2020) போது டிசம்பர் 31-ந் தேதி அன்று ரூ.181 கோடியே 90 லட்சத்துக்கும், புத்தாண்டு தினமான 1-ந் தேதி அன்று ரூ.133 கோடியே 50 லட்சத்துக்கும் என 2 நாட்களில் ரூ.315 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றிருந்தது.

இந்த புத்தாண்டு (2021) டிசம்பர் 31-ந் தேதி அன்று ரூ.159 கோடி, 1-ந் தேதி ரூ.138 கோடியே 80 லட்சம் என 2 நாட்களில் ரூ.297 கோடியே 80 லட்சத்துக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.17 கோடியே 60 லட்சம் குறைவாகும். இதில், 31-ந் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.48 கோடியே 75 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.28 கோடியே 10 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடியே 30 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.26 கோடியே 49 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.28 கோடியே 40 லட்சம் விற்பனையானது.

1-ந் தேதி (நேற்று) சென்னை மண்டலத்தில் ரூ.39 கோடியே 55 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.25 கோடியே 20 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.23 கோடியே 65 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.24 கோடியே 19 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.26 கோடியே 22 லட்சம் விற்பனை நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும் மது விற்பனை, முந்தைய ஆண்டின் சாதனையை முறியடிக்கும். ஆனால் இந்த புத்தாண்டில் விற்பனை குறைந்து, இந்த தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page