சென்னை,
தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு என்னென்ன தொழில்களுக்கு தளர்வு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டது. அந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் 20-ந்தேதி (நேற்று) நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அரசு கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறது:-
அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 20-ந்தேதிக்கு பிறகு என்னென்ன தொழில்களுக்கு தளர்வு அளிக்கலாம் என்பது பற்றி மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 15-ந்தேதி வெளியிட்டிருந்த அரசாணை செல்லுபடி ஆகாது என்று அறிவிக்கப்படுகிறது.
என்றாலும் ஊரடங்கின் போது அடிப்படை தேவைகளுக்காக விதிவிலக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் சேவைகள் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.