அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இது உலகின் மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு மடங்கு ஆகும். கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை, வியட்நாம் போரில் இறந்தவர்களை விட அதிகமாக உள்ளது.
வாஷிங்டன்,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோய், தொடர்ந்து அமெரிக்காவை குறிவைத்து தாக்கி வருகிறது. உலகின் பிற எந்த நாட்டையும் விட இங்குதான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. இது அமெரிக்கர்களை பெரும் சோகத்திலும், கவலையிலும், பீதியிலும் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 46 ஆயிரத்து 52 ஆக உள்ளது. உலகிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிற ஒரே நாடு, அமெரிக்காதான்.
உலகளவில் கொரோனா தாக்கியோர் எண்ணிக்கை 31 லட்சத்து 79 ஆயிரத்து 532 ஆக உள்ளது.
எனவே அமெரிக்காவின் பாதிப்பு, உலகின் மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக இருக்கிறது.
வியட்நாம் போரைவிட பலி அதிகம்…
இதேபோன்று கொரோனாவுக்கு உலகமெங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 713 ஆக உள்ளது.
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 60 ஆயிரத்து 111 ஆக உள்ளது. எனவே உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவின் பங்களிப்பாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே 1955-ல் தொடங்கி 1976-ல் முடிந்த போரில் பலியான அமெரிக்கர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 220 ஆகும். எனவே இப்போது கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வியட்நாம் போரில் பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை விஞ்சி விட்டது.
பிரார்த்திக்க டிரம்ப் வேண்டுகோள்
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரசால் பலியானவர்களுக்காகவும், தங்களுக்கு அன்பானவர்களை இழந்து தவிக்கிற அவர்களின் குடும்பத்தினருக்காகவும் தொடர்ந்து நாம் பிரார்த்தனை செய்வோம். இது போன்று இதுவரை நமக்கு நேர்ந்தது இல்லை.
நாம் ஒரே இதயத்தோடு துன்பப்படுகிறோம். அதே நேரத்தில் நாம் வெற்றி பெறுவோம். நாம் திரும்பவும எழுந்து வருவோம். நாம் திடமாக இருப்போம். தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயின் மோசமான நாட்கள் நமக்கு பின்னால் போய்விட்டதாக நமது வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
நமது நாட்டினை பாதுகாப்பான முறையில், விரைவில் திறக்கப்போவதை அமெரிக்கர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த சோதனையின்போது, மிகக் கடினமாக உழைக்கிற கோடிக்கணக்கான அமெரிக்கர்களை உண்மையிலேயே மிகப்பெரிய தியாகங்களை செய்யும்படி கேட்டோம். இது வேறெங்கும், யாராலும் சாத்தியப்பட முடியாத தியாகங்கள் ஆகும். இதுபோன்று நாம் ஒன்றைப்பற்றி எபபோதாவது பேசுவோம் என்று நாம் யாரும் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.
பரிசோதனை…
நாம் உலகளவில் வேறு எந்த ஒரு நாட்டையும் விட அதிகளவில் பரிசோதனைகளை நடத்துகிறோம். எனவேதான் நாம் கூடுதலான பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறோம். நாம் மிக மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா பரிசோதனையை செய்கிறோம்.
நான் நிபுணர்கள் சொல்வதை கேட்டு நடக்கிறேன். நாம் எப்போதுமே அவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறோம். நிறைய பேர் அதைத் தவறாக புரிந்து கொண்டனர். இது இந்தளவுக்கு தீவிரமாக இருக்கும் என்று மக்கள் நிறைய பேருக்கு தெரியாது.
தொடர்ந்து நிபுணர்கள் சொல்வதை கேட்டு வருகிறேன். அதை நான் உங்களுக்கு சொல்வேன். நான் செய்திருக்க கூடாது என நிபுணர்கள் நினைக்கிற சிலவற்றை நான் செய்து விட்டேன். நான் நமது நாட்டை மூடினேன். எல்லைகளை மூடினேன். சீனாவில் இருந்து இங்கு வருவோருக்கு தடை விதித்தேன். நாம் நமது அமெரிக்க குடிமக்களுக்கும் கூட கடுமையான சோதனைகளை நடத்தினோம். அமெரிக்கா மீண்டும் திறக்கப்பட்டு எழுச்சி பெறும். இது மிகவும் வெற்றிகரமாக நடந்தே தீரும். அடுத்த ஆண்டு நமது நாட்டுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக இருக்கப்போகிறது.
இவ்வாறு டிரம்ப் உருக்கமுடன் குறிப்பிட்டார்.
கலிபோர்னியா கவர்னர் கருத்து
இதே போன்று கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் கெவின் நியூசாமும் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், தனது மாகாணம் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக படிப்படியாக திறந்து விடப்படும் என்பதை கோடிட்டுக் காட்டினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாம் நம் நோய் எதிர்ப்புச்சக்தி அல்லது தடுப்பூசி பெறுகிற வரையில், நாம் எதையும் திரும்பிப் பார்க்க தேவையில்லை. நாம் உண்மை நிலவரம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மீண்டும் திறக்கும் திட்டங்களை அடிப்படையாக கொள்வோம். சித்தாந்தத்தின் அடிப்படையில் அல்ல. நாம் விரும்புவதை அல்ல. நாம் நம்புவதையும் அல்ல” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கலிபோர்னியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு 1,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மீண்டும் தொடங்கும்.
பல மாகாணங்கள் திறப்பு
அமெரிக்காவில் தற்போது 33 கோடிப் பேர் ஊரடங்கின் கீழ், வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் தனது ருத்ரதாண்டவத்தை தொடங்கிய போதே, ஊரடங்கை முதலில் அறிவித்த மாகாணங்கள் வாஷிங்டனும், கலிபோர்னியாவும்தான். இந்த மாகாணங்களில்தான் மக்களை முதன்முதலாக வீடுகளில் முடங்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அப்போட்டும் தனது மாகாணம் மீண்டும் திறக்கப்படுவதின் முதல் படி குறித்து அறிவித்துள்ளார்.
டென்னிசிசி மாகாணத்தில் இந்த வாரத்தின் பிற்பகுதியில் ஓட்டல்கள், உணவுவிடுதிகள், சில்லரை விற்பனை கடைகள் திறக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
பென்சில்வேனியா மாகாணத்தில் 3-ந் தேதி முதல் 3 கட்டங்களாக பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு கரோலினா, ஓரிகான், ஓக்லஹாமா, ஓஹியோ மாகாணங்களும் தங்கள் பொருளாதார நடவடிக்கைகள் பல கட்டங்களாக தொடங்கி விடும் என்று அறிவித்து இருக்கின்றன. உட்டா மாகாணம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது. அந்த மாகாண மக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மையம் என்று கருதப்படுகிற நியூயார்க் மற்றும் நியூஜெர்சி, கனெக்டிகட், பென்சில்வேனியா, டெலவாரே, ரோட் தீவுகள், மசாசூசெட்ஸ் மாகாணங்கள் மீண்டும் திறந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதில் ஒருங்கிணைந்து செயல்படப்போவதாக தெரிவித்துள்ளன.