கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா: 50 ராணுவ அதிகாரிகளுக்கு செலுத்தி சோதிக்கிறது

Spread the love

ரஷியா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாஸ்கோ,

ரஷியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி, கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைத்தது.

ஆனால் அதன் தாக்கம் முதல் 3 மாதங்களில் தீவிரமாக இல்லை. ஏப்ரல், மே மாதங்களில்தான் கொரோனா வைரஸ் அங்கு காட்டுத்தீ போல பரவியது. தினந்தோறும் சர்வ சாதாரணமாக சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானது.

இப்போது அந்த நாடு கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறது. அங்கு 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உயிர்ப்பலியில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் ரஷியா உள்ளது. இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 5,610 பேர் பலி என்கிறபோது அது ரஷியாவில் 5,031 ஆக இருக்கிறது.

கொரோனா வைரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவில் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளை முடித்துக்கொண்டுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற கட்டத்தை அடைந்துள்ளது.

அந்த வகையில் ரஷிய ராணுவத்தில் உள்ள 50 அதிகாரிகள் (தன்னார்வலர்கள்) இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள தனித்துவமான கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதிப்பதற்காக 5 பெண்கள் உள்ளிட்ட 50 ராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தது.

தன்னார்வலர்களின் முதல் குழுவுக்கு இன்று (புதன்கிழமை) மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ரஷிய ராணுவ அமைச்சகத்தின் 48-வது மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும்.

இங்குதான் எபோலா வைரஸ் தொற்று மற்றும் மெர்ஸ் வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்த்கது.

ரஷியாவில் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதிப்பது வரும் ஜூலை மாதத்தில் முடிவடையும் என்று ராணுவ அமைச்சகம் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page