கொரோனா தடுப்பு நடவடிக்கை சென்னையில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

Spread the love

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். உள்ளாட்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

680 மருத்துவ முகாம்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 33 ஆயிரம் பணியாளர்கள் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளையும், தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழாய்கள் மூலம் குடிநீர் பெற வசதியில்லாத குடிசைப் பகுதிகளில் லாரியில் வரும் தண்ணீரை பிடிப்பதற்காக பெருமளவில் கூடுவதை தவிர்க்கவும், வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையிலும் கூடுதலாக 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 350 சிண்டெக்ஸ் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் என மொத்தம் 680 மருத்துவ முகாம் கள் நடத்தப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நகர்ப்புறங்களில் வாழும் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1,000 வீதம், ரூ.1,058 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தெருவோர நடைபாதை வியாபாரிகள் அனைவருக்கும் முத்ரா திட்டத்தில் கடன் பெற்று வழங்கவும், நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி ரூ.10 ஆயிரம் வழங்கவும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு சுழல் நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கவும், வாழ்வாதாரம் இழந்த நகர்ப்புற இளைஞர்களுக்கு உடனடியாக தொழில் தொடங்கிட கடனுதவி பெறவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்பழனிச்சாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் பி.குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page