திருச்சியில் ரூ.200 கோடி மதிப்பில் 250 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சி,
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் சிறு, குறு தொழில் அமைப்புகளுடன் காணொலி காட்சி வழியே ஆலோசனை மேற்கொண்டார். இதில், திருச்சி மாவட்ட தொழில் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இதன்பின் அவர் பேசும்பொழுது,
திருச்சி மணப்பாறை காகித நிறுவனத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக 400 மெட்ரிக் டன் காகித கூழ் தயாரிக்கப்படும் என கூறினார்.
தொழில் கூட்டமைப்பினருக்கு தேவையான வசதியை அரசு செய்து தரும். திருச்சி மாவட்டத்துக்கு இந்த தொழில் வளர்ச்சி பணிகள் வரப்பிரசாதம் ஆக அமையும். என்று முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சியில் 250 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும். இதற்காக ரூ.200 கோடி செலவிடப்படும். 6 மாத காலத்துக்குள் இதற்கான பணிகள் நிறைவடையும். தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.